Murasoli : கேட்ட தொகையும் கொடுக்கல.. வெறும் கையால் முழம் போட்டு, வார்த்தைகளால் வடை சுட்ட மோடி- விளாசிய முரசொலி
குஜராத் மாநிலத்துக்கான நிதியை வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே அறிவிக்கிறது. ஆனால் தமிழ்நாடு ஒரு மாத காலமாக தட்டேந்தி நிற்கிறது. அது பிரதமர் கண்ணுக்குத் தெரியவில்லையென முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.
![Murasoli has criticized the central government for not allocating funds for Tamil Nadu flood KAK Murasoli has criticized the central government for not allocating funds for Tamil Nadu flood KAK](https://static-ai.asianetnews.com/images/01hk9c49dndhnvhv9myymz42j1/whatsapp-image-2024-01-04-at-10-05-32-am_363x203xt.jpg)
வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு தரவில்லையென திமுகவின் நாளிதழான முரசொலி தனது தலையங்கம் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக வெளியான கட்டுரையில், வைத்த கோரிக்கைகள் எதற்கும் பதில் சொல்லாமல் --– கேட்ட தொகை எதையும் கொடுக்காமல் –- வெறும் கையால் முழம் போட்டு –- வார்த்தைகளால் வடை சுட்டு விட்டுச் சென்று விட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள். திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். கடந்த மாதம் பெய்த மழையை 'கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க தமிழ்நாட்டு மக்கள் சார்பாக முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வெள்ளம் ஆக்கியது டிசம்பர் 3 ஆம் தேதி ஆகும். ஒரு மாதம் ஆகப் போகிறது. தென் மாவட்டங்களில் மழை பெய்து வெள்ளம் ஆக்கியது டிசம்பர் 17,18 தேதிகள் ஆகும். இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் அவர்கள் கோரியுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்.
ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் அவர்களிடம் டெல்லி சென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வைத்த கோரிக்கை இது. கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அன்று இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை வைத்து இரண்டு வாரங்கள் ஆகப் போகிறது. நிதி ஒன்றிய அமைச்சர் இங்கு வந்து பார்த்துச் சென்றார். அவரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒன்றியக் குழு மூன்று நாட்கள் தங்கி ஆய்வை நடத்தியது. அவர்களிடமும் முதலமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கைகளை வைத்தார். ஆனால் இதுவரை முதலில் 450 கோடி ரூபாயும், பின்னர் 450 கோடி ரூபாயும் ஒன்றிய அரசிடம் இருந்து தரப்பட்டது. இதுவும் வழக்கமாக வரும் நிதி தானே தவிர, இப்போது ஏற்பட்ட புயல் --– மழை –- வெள்ளச் சேதங்களில் இருந்து மீட்கப்பட்ட சிறப்பு நிதி அல்ல.
குஜராத் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது, அன்றைய தினமே அங்கு போய் பார்க்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. ஆனால் தமிழ்நாட்டுக்கு பார்க்க வரவில்லை. ஒரு மாதம் கழித்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களைப் போய் பார்க்கவில்லை. குஜராத் மாநிலத்துக்கான நிதியை வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே அறிவிக்கிறது. ஆனால் தமிழ்நாடு ஒரு மாத காலமாக தட்டேந்தி நிற்கிறது. அது பிரதமர் கண்ணுக்குத் தெரியவில்லை. அரசிடம் பேரிடர் நிவாரணத் தொகையாக 68 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உள்ளது. அதில் இருந்து தான் கேட்கிறோம். கொடுக்க மனமில்லை. அதனால் அவர்கள் கொடுக்கவில்லை.
ஆனால், 'காங்கிரஸ் ஆட்சியை விட இரண்டரை மடங்கு அதிகமாக பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு நிதி கொடுத்ததாக' திருச்சி கூட்டத்தில் பிரதமர் பேசி இருக்கிறார். ஒரே ஒரு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டதை மட்டும் பார்ப்போம். மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசின் சாதனையாகச் சொல்லப்படுகிறது. 2018 முதல் 2023 வரைக்கும் 6 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின்மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை 3 ஆயிரத்து 273 கோடி ரூபாய்.
மற்ற மாநிலங்களுக்கு பாருங்கள்...
• மகாராஷ்டிரா ரூ.28,493 கோடி
• கர்நாடகா ரூ.17,532 கோடி
•டெல்லி, உபி ரூ.16,189 கோடி
•டெல்லி, உபி, அரியானா ரூ.13,424 கோடி
•மேற்கு வங்கம் ரூ.13,109 கோடி
•குஜராத் ரூ.12,897 கோடி
• யு.பி. ரூ.11,565 கோடி-– இவற்றையும் பாருங்கள்.
தமிழ்நாட்டையும் பாருங்கள். ஏன் அந்த மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று நாம் கேட்கவில்லை. தமிழ்நாடு ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்று தான் கேட்கிறோம். பா.ஜ.க. வைத்துள்ள வரைபடத்தில் தமிழ்நாடு ஏன் இல்லை என்று தான் கேட்கிறோம். மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும் அங்கு வாழும் மக்களின் கோரிக்கைகள்தானே தவிர, அவை, 'அரசியல் முழக்கங்கள்' அல்ல என்றும் பிரதமருக்கு முன்னால் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். இவை பிரதமருக்கு புரியுமா எனத் தெரியவில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் புரிய வைப்பார்கள் என்பது தெரிகிறது என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்