பணத்தைக் கட்டாவிட்டால் ஏலம் விட்டுடுவோம் என்று அறிவித்ததால்  பிரேமலதா பதறிப்போய் பணத்தை எடுத்து கட்டிவிட்டார். பாவம் விஜயகாந்தோ இதையெல்லாம் அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ளும் நிலைமையில் இல்லை!

நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக மண்ணைக் கவ்வியது. அதற்க்கு முன்பும் கூட தோல்வியையும், சரிவையும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது. விளைவு, பணம் செலவழித்து அக்கட்சியைக் காப்பாற்றும் வகையில் அங்கே வெயிட்டு கை என சொல்லும் அளவிற்கு யாருமே இல்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில், ஏதோ ஒரு தைரியத்தில், ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் நாங்களும் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம், எங்ககிட்ட ஒட்டு இருக்கு கூட்டணிக்கு வாங்க என தேர்தல் நேரத்தில் மட்டும் கூவி அழைக்கிறார் அண்ணியார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கெத்தாக இருந்த நேரத்தில் விஜயகாந்த் தனது சினிமா மற்றும் அரசியலில் எவ்வளவோ ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கிறார் தான். சினிமாவில் அவர் நடித்து சம்பாதித்த காசில் பலருக்கு உதவியிருக்கிறார். அவர் நடித்ததற்கு உரிய சம்பளம் தராமல் சிலர் நாமம் போட்டதும் உண்டு. ஆனால், வாங்கிய துட்டுக்கு வட்டியும் முதலும் கட்டாத காரணத்தினால் கேப்டனின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகின்றன! என்று வந்த அறிவிப்பு கேப்டனின் புகழுக்கு பெரும் இழுக்கானது, தீவிர விசுவாசிகளும் ரசிகர்களும் கலங்கித்தான் போனார்கள். 

சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தங்கள் ஆண்டாள் அழகர் கல்வி நிறுவன வளர்ச்சிக்காக, அறக்கட்டளை பெயரில் இருபது வருடங்களுக்கு முன் சில கோடிகள் கடன் வாங்கியிருக்கிறது கேப்டனின் குடும்பம். இத்தனை வருஷங்கள் ஓடிவிட்ட இந்த சமயத்தில் அதற்கான வட்டி தொகையானது, அசலுடன் இணைந்து 5.52 கோடி ரூபாயானது. இதற்கு ஈடாக பல கோடி மதிப்புடைய அவருடைய சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக தகவல் வெளியானது. 

இது பொய், இது அரசியல் ஸ்டண்ட், விஜயகாந்த் மீது பரிதாபத்தை ஏற்படுத்திட அண்ணியார் மற்றும் தளபதி என தேமுதிகவினரால் அன்போடு அழைக்கப்படும் சுதீஷூம் சேர்ந்து நடத்தும் நாடகம்! என்று பல விமர்சனங்கள் வெடித்தன. கம்பீரமாக இருந்த எங்க கேப்டன் நொடித்துவிட்டரா? உடல்தான் வீக் ஆனது சொத்துமா போச்சு? என்றெல்லாம் புலம்பினார் ரசிகர்கள்.

இந்நிலையில், சமீபத்தில் வங்கியின் அந்த ஏல நடவடிக்கை கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி விசாரித்தால் உண்மையே. கேப்டனின் சொத்துக்களை ஏலம் விடும் அறிவிப்பை வெளியிட்டதும், ஜூலை மாதத்தில் 1.20 கோடி ரூபாய் வட்டியை செலுத்தியதோடு,நாங்க கொடுத்திருக்கும் கால கெடுவுக்குள் கடனை முழுவதுமாக செலுத்திவிடுவதாக விஜயகாந்த் தரப்பு உறுதி கொடுத்ததால், ஏல நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறது. 

அதாவது பணத்தைக் கட்டாவிட்டால் ஏலம் விட்டுடுவோம் என்று அறிவித்ததால் பிரேமலதா பதறிப்போய் பணத்தை எடுத்து கட்டிவிட்டார். பாவம் விஜயகாந்தோ இதையெல்லாம் அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ளும் நிலைமையில் இல்லை! இதே மாதிரி கட்சிக்கு ஒரு நிலை வந்தால் தான் பிரேமலதா சரிப்பட்டு வருவார். இல்லையென்றால் கட்சியும் அடமானத்துக்கு போய், அழிந்தே விடும்! என்று புலம்புகின்றனர் கேப்டனின் ரசிகர்கள்!.