தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், இப்போது திமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி. கடந்த முறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது 3 வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. அதில் ஒரு வழக்கைதான் சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், செந்தில்பாலாஜி சற்று நிம்மதியடைந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இந்நிலையில் பண மோசடி தொடர்பாக செந்தில்பாலாஜி மீதுள்ள 2 வழக்குகளை மையமாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. விசாரணைக்காக வரும் 11-ஆம் தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.