குறி வைக்கப்படும் முகமது ஷமி.. பழைய இந்தியாவில் இப்படி கிடையாது.. வெளுத்து வாங்கும் பிரபலங்கள்.!
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக சமூக வளைத்தளங்களில் நடந்துவரும் தாக்குதல்களுக்கு பிரபலங்கள் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை வாரி வழங்கிய முகமது ஷமியை குறி வைத்து தாக்கி வருகிறார்கள். இந்நிலையில் முகமது ஷமிக்கு ஆதரவாக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், “முகமது ஷமி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்கள் யாருக்கும் அன்பை தராததால், அவர்கள் வெறுப்பால் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்: இந்திய அணியை ஆதரிக்கிறோம் என்றால் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களையும் ஆதரிக்க வேண்டும். முகமது ஷமி உலகத்தரமான பந்துவீச்சாளர். அன்று ஷமிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. முகமது ஷமி, இந்திய அணிக்கு பின்னால் நிற்கிறேன்.
வீரேந்திர சேவாக்: முகமது ஷமி மீது நடத்தப்படும் சமூகவலைதள தாக்குதல் அதிர்ச்சியாக உள்ளது. அவர் ஒரு சாம்பியன் வீரர். யார் ஒருவர் இந்திய அணியின் தொப்பியை தங்கள் தலை மீது சூட்டுகிறார்களோ, அவர்கள் இந்திய நாட்டை தங்கள் இதயத்தில் ஏந்தி நிற்கிறார்கள் என்று அர்த்தம். சமூக வலைதள கும்பலைவிடவும் அவர்களுக்கு தேசப்பற்று அதிகம். உங்களோடு இருக்கிறோம் ஷமி.
இர்பான் பதான்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய அணியில் நானும் இருந்திருக்கிறேன். அப்போதும் இந்தியா தோற்றிருக்கிறது. ஆனால், என்னை நீங்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று யாரும் சொன்னது கிடையாது. நான் சொல்வது சில வருடங்களுக்கு முந்தைய இந்தியாவை. இதுபோன்ற முட்டாள்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும். இவர்களைப் போல பல முன்னாள் வீரர்கள், இந்திய வீரர் முகம்மது ஷமிக்கு ஆதரவாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.