தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிய அப்போலோ மருத்துவமனை விசாரித்தும் வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பால் குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், மண்சோறு சாப்பிட்டும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வருகின்றனர். கோயில்களில் சிறப்பு யாகங்களும், மசூதி - சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக கட்சி தலைவர்கள்,கேரளம் மற்றும் புதுவை மாநில முதலமைச்சர்கள் - ஆளுநர்கள் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய மருத்துவமனை வந்து செல்கின்றனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய தமிழகம் வரவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் பிரதமர் நரேந்திர மோடியும் நானும் சென்னைக்கு சென்று சந்திக்க உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
