பெட்ரோல் விலையை கொஞ்சம் குறைங்கப்பா… ஏழைங்க ரொம்ப பாவம்....சவுண்ட் விட்ட விஜயகாந்த் !!
சாமான்ய மக்களின் நிலையை அறிந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பபப் பெற வேண்டு என வலியுறுத்தியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொது மக்களின் சுமையை அதிகரிக்காமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மத்திய தொழிற்சங்கங்களும் முழுமையான ஆதரவை தெரிவித்திருந்தன.. தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் 2.3 லட்சம் ஆட்டோக்கள் ஓடவில்லை.
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கண்டனப்பேரணி நடைபெற்றது.
குஜராத்தில் முழு அடைப்பு காரணமாக பொது மக்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை முடக்கினர், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட அனைத்து வட மாநிலங்களிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
ஆந்திர பிரதேசத்தில் சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் சம்பல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் தமிழக ஆளும் கட்சியான அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சாமான்ய மக்களின் நிலையை அறிந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பபப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பொது மக்களின் சுமையை அதிகரிக்காமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்