#BREAKING மாநிலங்களவை எம்.பி.யாக அப்துல்லா போட்டியின்றி தேர்வு.. திமுகவின் பலம் 8ஆக உயர்ந்தது..!
தமிழகத்தில் அதிமுக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த முகமது ஜான் மார்ச் மாதத்தில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவால் அவர் வகித்து வந்த எம்.பி. பதவி காலியானது. இப்பதவிக்கு செப்டம்பர் 13ம் தேதியன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை எம்.பி.யாக திமுகவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த முகமது ஜான் மார்ச் மாதத்தில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவால் அவர் வகித்து வந்த எம்.பி. பதவி காலியானது. இப்பதவிக்கு செப்டம்பர் 13ம் தேதியன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 24ம் தேதி அன்று தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், மதிவாணன் என மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் முகமது அப்துல்லா 27ம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த தேர்தலில் பெரும்பான்மை ஆதரவு உள்ள திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. எனவேதான் மற்ற கட்சிகள் எதுவும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், 3 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக திமுகவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனுடம் இருந்து அப்துல்லா பெற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம் 2025ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி வரை மாநிலங்களவை உறுப்பினராக செயல்படுவார். அப்துல்லா தேர்வானதன் மூலம் மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.