அரசியலில் க்ரோனா வைரஸ்கள் பரவுகிறது! நாங்கள் கேட்டது மருந்து ஆனால் நீங்கள் இனிப்புகளை தந்துள்ளீர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாற்றியுள்ளார்.    

அரசியலில் க்ரோனா வைரஸ்கள் பரவுகிறது! நாங்கள் கேட்டது மருந்து ஆனால் நீங்கள் இனிப்புகளை தந்துள்ளீர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாற்றியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற சட்டமன்றம் முற்றுகை பேரணி , இன்று நடைபெற்றது. அப்போது அண்ணாசாலை, கடற்கரை சாலை உட்பட சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது ஹஜ் பயணிகளுக்கான கட்டிடம் கட்ட 15 கோடியும், உலமாக்கள் ஓய்வூதியம் ரூபாய் 1500 லிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டதும், உலமாக்கள் ஸ்கூட்டி வாங்க 25 ஆயிரம் மானியம் அளிப்பதும் என முதல்வர் 110-விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறாரே ?என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மஜக சார்பில் நான் சட்டமன்றத்தில் பேசினேன். கடந்த வாரம் இதை எழுத்து மூலமாகவும் முதல்வரிடம் நேரில் கொடுத்தேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஆனால் தற்போது அரசியலில் "க்ரோனோ" வைரஸ்கள் பரவுகிறது . அந்த வைரஸ்கள்தான் குடியுரிமை சட்டங்கள். அதற்கு நாங்கள் மருந்து கேட்டோம். 

ஆனால் இனிப்புகளை முதல்வர் தந்திருக்கின்றார். அதை பெற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களை க்ரோனோ வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க மருந்து கேட்டும், அதை அவர் தரவில்லை. எனவே அவர் தந்த இனிப்புகளை கொண்டாட முடியாத மனநிலையில் உள்ளோம். ஆனால் அதை வரவேற்கிறோம். இன்னும் 24-மணி நேரம் அவகாசம் உள்ளது . நாளையே இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது மறுபரீசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால்நாங்கள்மகிழ்ச்சி அடைவோம். நன்றி பாராட்டுவோம். 

வெறுமனே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அதை கண்துடைப்பு என்போம் என்று பதிலளித்தார். பேரணியின் இந்த எழுச்சி தொடருமா? அடுத்த போராட்டம் என்ன? என செய்தியாளர்கள் அடுத்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , நாங்கள் சட்டமன்ற முற்றுகைக்கு ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்றோம்.. ஆனால் இரண்டரை லட்சம் பேர் வந்ததாக பத்திரிக்கையாளர்களே வியக்கின்றனர். மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும் . தொடர்ந்து பல வடிவ போராட்டங்களை , இதே போல் எல்லா மக்களையும் இணைத்து அமைதி வழியில் நடத்துவோம். சளைக்க மாட்டோம் என்று பதிலளித்தார்.