தலைவராக அவதாரமெடுக்கும் ஸ்டாலின்: உற்சாகத்தில் மிதக்கும் திமுகவினர்!
திராவிட இயக்க தலைவர்களின் அடையாளங்களாக கருதப்படுவதில் தொப்பிக்கும், கருப்பு கண்ணாடிக்கும் முக்கிய பங்கு உண்டு. கலைஞர் எப்போதும் கருப்பு கண்ணாடி அந்திந்திருப்பார். எம்.ஜி.ஆர் எப்போதும் தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடியுடன் காட்சி அளிப்பார்.
திமுக தலைவர் கருணாநிதியின் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை ஒத்துழையாமை போன்ற காரணங்களால், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி விட, அந்த இடத்திற்கு பொறுப்பேற்றுள்ளார் ஸ்டாலின்.
சாதாரணமாக படிப்பதற்கு மட்டுமே கண்ணாடி பயன்படுத்தும் பழக்கம் உள்ள ஸ்டாலின், தற்போது, கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், கருப்பு கண்ணாடி அணிந்து சட்டமன்றத்திற்கு வந்துள்ளார்.
அதை கண்டு, இதுவரை தளபதியாக இருந்த ஸ்டாலின், இப்போது தலைவராகி விட்டார் என்று உற்சாகத்தில் மிதந்துள்ளனர் திமுக எம்.எல்.ஏ க்கள்.
கண்ணாடி அணிந்ததால் மட்டுமே, அவர் கருணாநிதியின் இடத்திற்கு வந்து விட்டார் என்று சொல்வதற்கில்லை. கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவை நடத்திய போதே, அவர் அந்த இடத்தை நெருங்கி விட்டார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்திரா காந்தி காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை, நாட்டில் எவ்வளவு அடக்குமுறையை உருவாக்கியது என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு எதிர் கட்சிகள் நசுக்கப்பட்டு, ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது.
அப்போது, தேசிய அளவில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டி, காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றி, ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தியதில் திமுக தலைவர் கருணாநிதியின் பங்களிப்பை இந்திய அரசியல் உலகம் என்றுமே மறந்துவிடாது.
அந்த அளவுக்கு, கருணாநிதியின் சட்டமன்ற விழாவில், பாஜகவுக்கு எதிர் அணியில் உள்ள தேசிய தலைவர்களை எல்லாம் ஒரே அணியில் திரட்டி, குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த, ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியையும் ஒப்பிடலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதன் மூலம், தேசிய அரசியலிலும் தன்னை ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக நிலைநிறுத்த ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கம்யூனிஸ்ட் ராஜா, சுதாகர் ரெட்டி போன்றவர்கள், விழா மேடையில் ஸ்டாலினை பாராட்டியதே அதற்கு சான்றாகும்.
கருணாநிதிக்கு நிகரான ஆளுமை, சாதுர்யம் போன்றவற்றை நோக்கி ஸ்டாலின் நெருங்கி கொண்டிருக்கிறார் என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்நிலையில், கருணாநிதியின் அடையாளமான கருப்பு கண்ணாடியை அணிந்து வந்த ஸ்டாலினை பார்த்து, தளபதி… தலைவராகிறார் என்று திமுகவினர் உற்சாகப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை.