வர்ற தேர்தலில் ஜெயிச்சா மொத்த கல்விக்கடனும் தள்ளுபடி... விவசாயிகளுக்கும் குஷியான செய்தியை சொன்ன ஸ்டாலின்!!
மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொரப்பள்ளி ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வருஷமாக 18 தொகுதிகளும் காலியாக இருந்த நிலையில் தற்போது 3 தொகுதிகள் சேர்ந்துள்ளது.
எனவே ஒரே நேரத்தில் இடைத்தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் வைக்கப்பட்டால் தேர்தல் செலவுகள் குறையும். இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக தன் பெரும்பான்மையை இழந்துவிடும் என்பதால் இடைத்தேர்தல் நடத்தவிடாமல் செய்கின்றனர்.
இவர்கள் சொல்வதைத்தான் மோடியும் கேட்கிறார். இதை சொல்லித்தான் அதிமுகவை கூட்டணிக்குள் இழுத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். வரும் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் கட்டாயம் இடம் பெறும் என நான் தற்போது தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றார் ஸ்டாலின்.