இது நாள் வரை வட நாட்டு தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான மாளிகை என்றே இந்த வீட்டை அப்பகுதியில் உள்ள பலரும் நினைத்து வந்த நிலையில் அது ஸ்டாலின் மகள் செந்தாமரைக்கு சொந்தமானது என்று தெரியவந்து பலரும் வாயை பிளக்க ஆரம்பித்துவிட்டனர்.

சென்னை நீலாங்கரையில் கடற்கரை ஓரம் தொழில் அதிபர்கள், சினிமா பிரபலஙகள் போன்றோர் வசித்து வரும் பகட்டான பகுதி நேற்று காலை பரபரப்பாக இருந்தது. ஏதோ சினிமா சூட்டிங் என அப்பகுதிவாசிகள் அதனை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில் பிறகு தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பான பின்னரே அங்குள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து கொண்டிருப்பதும், அந்த வீடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலி மகள் செந்தாமரைக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. நீலாங்கரை பிரதான சாலையில் இருந்து துணைச்சாலை ஒன்றுக்குள் நுழைந்து பிறகு ஒரு சந்து போன்ற வழி வருகிறது. அந்த வழியில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு கார் மட்டுமே செல்ல முடியும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படி குறுகலான அந்த சந்தின் முடிவில் தான் அந்த பிரமாண்ட மாளிகை உள்ளது. அரண் போன்ற நுழைவு வாயில் கதவுக்கு அருகே நின்று பார்த்தால் கூட அந்த மாளிகையின் பிரமாண்டம் தெரியும். பார்க்க பிரபலமான ஐடிசி நிறுவன ஓட்டல் போன்று கம்பீரமாக தெரியும் அந்த வீடு தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வசிக்கும் வீடு. செந்தாமரை தனது கணவர் சபரீசனோடு அங்கு வசித்தாலும் பெரிய அளவில் யாருக்கும் அவர்களை பற்றி தெரியவில்லை. செய்தியாளர்கள் அந்த பகுதிக்கு சென்று சபரீசன் வீடு எது என்று கேட்டால் பலருக்கு அப்படி ஒருவர் யார் என்றே தெரியவில்லை.

பிறகு திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் வந்த பிறகே அப்பகுதியில் இருந்த அந்த மாளிகை சபரீசனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. வருமான வரித்துறை சோதனை நடைபெறும் செய்தியை ஊடகங்கள் நேரலை செய்து கொண்டிருந்த நிலையில் பலருக்கும் அந்த வீட்டின் பிரமாண்டம் தான் கண்களை உறுத்தியது. கடற்கரை ஓரத்தில் இவ்வளவு பிரமாண்ட வீடா? அதுவும் ஸ்டாலின் மகளுக்கா? என்று பலர் பேசிக் கொண்டதையும் காதுகளில் கேட்க முடிந்தது. சிலர் ஒரு படி மேலே போய் அந்த வீட்டின் மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும், 500கோடி ரூபாய் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஸ்டாலின் மகள் வீட்டில் இருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று தகவல்கள் கூறப்பட்டாலும் அந்த வீட்டின் பிரமாண்டம் பலருக்கும் ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்பிக் கொண்டே தான் இருக்கும்.