குடியுரிமை சட்டத்தால் அகதிகளாகும் 12 லட்சம் இந்துக்கள். சதிக்கு எதிராக ஒன்றிணைந்த இந்து முஸ்லீகள்..!!
அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதையும், அஸ்ஸாம் மாநில பாஜகவினரே இதை எதிர்ப்பதையும் எல்லோருக்கும் எடுத்து சொல்ல வேண்டும். இச்சட்டங்களால் அன்பழகனுக்கும் ஆபத்து உண்டு. அப்துல் ரஹ்மானுக்கும் ஆபத்து உண்டு.
டெல்லி கலவரத்தின் போது சமூக விரோத கும்பல்களிடமிருந்து இந்து கோயிலை முஸ்லிம்களும் , முஸ்லிம்களை இந்துக்களும் பாதுகாத்துள்ளனர் என மாஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினரும் முதமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் துளசேந்திரபுரத்தில் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பேரணியும், பொதுக் கூட்டமும் நடைப்பெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் பங்கேற்றன. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது...
'இந்த போராட்டம் வட இந்தியாவில் முன்னெடுக்கப்படுவது போல, பல இன மக்களும் பங்கேற்கும் களமாக விரிவுப்படுத்தப்பட வேண்டும். டெல்லியில் நடைபெறும் ஷாகின் பாக் போராட்ட களம் அவ்வாறு தான் நடக்கிறது. பல இன மக்களும் பங்கேற்பதால், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்ற பிறகும் மக்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். அதனால் தான் சங்பரிவார் தனக்கான ஆதரவான கூலிப்படைகளை வைத்து டெல்லியில் திட்டமிட்ட வன்முறையை நடத்தி உள்ளார்கள். கூலிப்படை வன்முறை கும்பல்கள் பள்ளிவாசல்களைத் தாக்கியது.
ஆனால், அன்று இரவு அங்குள்ள கோயிலை முஸ்லிம்கள் பாதுகாத்து இந்துக்களிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர் அதேபோல, அங்கு கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை பல இடங்களில் இந்துக்கள் அரண் அமைத்து பாதுகாத்துள்ளனர் . துயரத்திலும், இவ்விரு சம்பவங்கள் நெகிழ்ச்சியை தருகின்றன. இது தான் உண்மையான இந்தியா என்பதை ஃபாஸிஸ்ட்டுகள் உணர வேண்டும். குடியுரிமை சட்டங்களால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆபத்து இருக்கிறது. அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதையும், அஸ்ஸாம் மாநில பாஜகவினரே இதை எதிர்ப்பதையும் எல்லோருக்கும் எடுத்து சொல்ல வேண்டும்.
இச்சட்டங்களால் அன்பழகனுக்கும் ஆபத்து உண்டு. அப்துல் ரஹ்மானுக்கும் ஆபத்து உண்டு. ஆண்டனிக்கும் ஆபத்து உண்டு. இது குறித்து சமூக தலைவர்களிடம் விழிப்புணர்வு உள்ளது. அதை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.இதை சுற்றி வாழும் வன்னியர்கள், தேவர்கள், தலித்துகள், யாதவர்கள், நாடார்கள் உள்ளிட்ட எல்லா சமூக மக்களிடமும் இதன் அபாயங்களை விளக்கி, அவர்களை ஜனநாயக போராட்ட களத்தில் இணைக்க வேண்டும். இவ்வாறு அன்சாரி பேசினார்.