வேலூரில் தங்கமணி, எம்.ஆர்,விஜய பாஸ்கர் ஓட்டு வேட்டை ! ஸ்கெட்ச் போட்டு தூக்க முடிவு !!
வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளரை ஏ.சி.சண்முகத்தை ஜெயிக்க வைக்க அதிமுக அமைச்சர்கள் வேலூர் தொகுதியை முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் விருப்பப்படி ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெறச் செய்ய ஸ்கெட்ச் போட்டு பணியாற்றி வருகின்றன.
பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு எழுந்ததையைடுத்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது.
திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த்தும், அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வேலுார் மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அமைச்சர்கள் மற்றும், அ.தி.மு.க., நிர்வாகிகள், நேற்று தேர்தல் பணியாற்ற வேலுார் வந்தனர்.
அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், ஜெயகுமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர், சரோஜா, நிலோபர் கபில் உட்பட, 30 அமைச்சர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து, அ.தி.மு.க., நிர்வாகிகள், 3,000 பேர், தற்போது வேலுார் வந்தனர்.
குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர், சரோஜா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, கிராமங்களில் உள்ள ஒவ்வொரு பூத்திலும், 200 ஓட்டுகளை வாங்க திட்டமிட்டு செயல்பட வேண்டும் என தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து குடியாத்தத்தில் பல இடங்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரித்தனர்.
இதனைடையே வேலுார் சைதாப்பேட்டையில் துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக துணை ராணுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.