சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் வீடு திட்டத்திற்காக இன்று கோவை மாவட்டத்திற்கென முதலமைச்சர், 18 கோடியே 45 லட்சம் ஒதுக்கியுள்ளார். வரக்கூடிய காலத்தில் மீதமுள்ள பயனாளிகளுக்கும் உதவிடும் வகையில் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வார். இந்த ஓராண்டுக் காலத்தில் தமிழகத்தில் 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. கோவை 24×7 சேவையில் 8 ஆயிரத்து 407 புகார்கள் பெறப்பட்ட நிலையில் 4 ஆயிரத்து 637 புகார்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் மேம்பாலம் அவர்களே திறந்துக்கொள்வோம் என தெரிவித்திருக்கின்றனர்.

பாஜகவினர், அவர்களே திறந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும். சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. குண்டர்கள், வன்முறையாளர்கள், முரடர்களைப் போன்று களத்திலிருந்தார்கள் என்றால், அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. வாலாங்குளம் படகு சவாரியில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை சார்பில் அந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்து கடிதம் அனுப்பி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் மானியத்துடன் வீடு கட்டும் பணி ஆணை மற்றும் 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான ஆணை ஆகியவற்றை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
