Minister Sengottaiyan pressmeet in Chennai Kotturpuram

தனியார் பள்ளிகளில் ஏழை - எளிய மாணவர்கள் கல்வி பயிலுவதற்காக 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் விரைவில் அவை பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோடை விடுமுறைக்கு பிறகு இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க உள்ளன. இந்த நிலையில் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, சென்னை, கோட்டூர்புரத்தில் அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவர்களின் நிலையை மனதில் கொண்டு உட்கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். 

தனியார் பள்ளிகளில் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் கட்டண விவரங்கள் ஒட்டப்பட வேண்டும என்றார்.
தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி திறந்த நாளிலேயே மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கப்படும் என்றார். வருகிற ஒன்றாம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 வண்ணங்களில் சீருடை வழங்கப்படும் என்று கூறினார்.

தனியார் பள்ளிகளில் ஏழை - எளிய மாணவர்கள் கல்வி பயிலுவதற்காக 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் விரைவில் அவை பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.