சென்னயில் இனி வெள்ளநீர் தேங்காது..! புதிய திட்டம் வகுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு பதில்
இனி வரும் காலங்களில் தொடர் கனமழையின் போது சென்னையிலுள்ள சுரங்கங்களில் மழைநீர் தேங்காதவாறு திட்டம் வகுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையொட்டி கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையினால் சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. சென்னை நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரபாக்கம் உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. சென்னையின் முக்கிய சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் தேங்கி மக்கள் வெளியே வரமுடியாதவாறு வீட்டிற்குள் முடங்கினர்.தாழ்வான மற்றும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உடமைகளோடு அப்புறப்படுத்தபட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். துரைசாமி , வியாசர்பாடி, கணேசபுரம், அரங்கநாதர் , பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து சுரங்கபாதைகளும் வெள்ளத்தில் முழ்கின. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் படகுகளில் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு,பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் கனமழையினால் சென்னை தலைநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் துயர சம்பவங்கள், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கபாதை உறுதிதன்மை குறித்து அமைச்சர் சேகர் பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கடந்த ஆட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களை போட்டு, வடிகால் அமைப்பினை சீரழித்து சென்றுள்ளனர். அதனை சரி செயவதற்கு குழு அமைக்கபட்டுள்ளது என கூறினார். மேலும்,தேவைப்படும் இடங்களுக்கு வடிகால் அமைக்க வேண்டும், வடிகால் அமைப்பு எங்கு சென்று சேர வேண்டும் என்பதனை வடிவமைக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளார். தவறாக உள்ள வடிகால் இணைப்புகள் குறித்து மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இனி வரும் காலங்களில் சென்னயிலுள்ள அனைத்து சுரங்க பாதைகளில் நீர் தேங்காதவாறு திட்டம் வகுக்கபடும் என தெரிவித்தார். சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள நீர் தேங்க கூடிய பாலங்களை சரி செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுப்பட்டுள்ளது எனவும், நிதிச்சுமை இருந்தாலும் சென்னை ஒளிரச் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினார்.
இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பூண்டி நீர் தேக்கத்திலிருந்து வெளியேற்றும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. விரைவில் அப்பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீர் அகற்றப்படும், அப்பகுதிகளிலுள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.