பூச்சாண்டி காட்டும் தினகரன்.. கிண்டலாக பதிலடி கொடுத்த அமைச்சர்
அமைச்சர்கள் அனைவரும் தன்னுடன் வரத்தயார் என தினகரன் கூறியிருப்பது மிகப்பெரிய காமெடி என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர்கள் அனைவரும் தன்னுடன் வரத்தயார் என தினகரன் கூறியிருப்பது மிகப்பெரிய காமெடி என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி தனித்து செயல்பட்டு வருகிறார். அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்பதே நோக்கம் எனவும் அதுவரை அரசியல் செய்வதற்காக அமமுக என்ற அமைப்பை தொடங்கியதாகவும் கூறிய தினகரன், தற்போது அதிமுக மீட்பு குறித்தெல்லாம் பேசுவதில்லை.
ஆட்சியாளர்களை தினகரன் விமர்சிப்பதும் அதற்கு அவர்கள் பதிலடி கொடுப்பதும், மீண்டும் தினகரனை அவர்கள் விமர்சிப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் பதிலடி கொடுப்பதுமாக பரஸ்பரம் விமர்சனங்களும் பதிலடிகளும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.
மன்னார்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரனை கடுமையாக விமர்சித்ததோடு, பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே, முதல்வராக தினகரன் சதி செய்ததாகவும் அதனால்தான் தினகரனை ஜெயலலிதா ஒதுக்கிவைத்ததாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் திவாகரன் இல்லாத நேரத்தில் தன்னை மிரட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம்சாட்டிய பன்னீர்செல்வம், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு பிறகு தினகரன் அணி காணாமல் போய்விடும் என தெரிவித்தார்.
பன்னீர்செல்வத்தின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த தினகரன், இனி முதல்வர் பதவி கிடைக்காது என்ற விரக்தியில் பன்னீர்செல்வம் பேசுவதாகவும் அமைச்சர்கள் அனைவரும் தன்னுடன் வரத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தினகரனின் கருத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தன்னுடன் வரத்தயார் என தினகரன் கூறியிருப்பது மிகப்பெரிய காமெடி என ஓ.எஸ்.மணியன் கிண்டலடித்துள்ளார்.
தினகரன் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதிலிருந்தே, தனக்கு பல அமைச்சர்கள் ஆதரவளிப்பதாகவும் தனக்கு வெளிப்படையாக ஆதரவளித்த 18 எம்.எல்.ஏக்களை தவிர மற்ற சில எம்.எல்.ஏக்களும் மறைமுகமாக ஆதரவாக இருப்பதாகவும், அந்த ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் எல்லாம் தேவையான நேரத்தில் வெளிவருவார்கள் எனவும் தினகரன் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.