ஆவின் நிறுவன பணி நியமனத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்டவர்களின் பணி ஆணை ரத்து செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

​தமிழகத்தில் 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் பணி நியமனங்களை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே நியமிக்க வேண்டும். ஆனால் மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், திருச்சி, விருதுநகர், தேனி, தஞ்சாவூர் ஆகிய யூனியன்களில் 236 பணி நியமனங்கள் முறைகேடாக நடைபெற்றுள்ளதாக ஆவின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உதாரணமாக, துணை மேலாளர் பணி இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் எழுத்து தேர்வில் 29 மதிப்பெண்கள் பெற்றதாக மதிப்பீட்டு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேர்முக குழு 31 மதிப்பெண்கள் கொடுத்து முறைகேடாக பணி நியமனம் செய்ததாக புகார்கள் வந்தது. இதேபோன்று 8 மாவட்டங்களில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

பணி நியமன முறைகேட்டில் உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களும், நிர்வாக குளறுபடிகளும் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், இந்த பணி நியமன முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் ஊழல் தடுப்பு பிரிவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 


இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆட்சி காலத்தில் பணி நியமனத்தில் பல தவறுகள் நடந்துள்ளன. மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல், திருச்சி, தேனி, தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 236 பேரை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறைகேடாக தேர்வு செய்யப்பட்ட 872 பணி நியமன ஆணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பணி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், கூடுதல் கோப்புகளுடன் விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.