- Home
- Tamil Nadu News
- அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்..! பன்னீரை வருகை.. குஷியில் ஸ்டாலின் போட்ட பதிவு..
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்..! பன்னீரை வருகை.. குஷியில் ஸ்டாலின் போட்ட பதிவு..
திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளார்.

திமுகவில் பன்னீசெல்வம்
முன்னாள் முதல்வரும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியுமான ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக.வில் இணைத்துக் கொண்டார். அவருடன் சேர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரனாத் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் 3 முறை முதல்வர் பொறுப்பை அலங்கறித்த ஒருவர் மாற்று கட்சிக்கு செல்வது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
திராவிட இயக்கக் கொள்கை காக்க..
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
அன்பானவர், பண்பானவர், அமைதியானவர்..
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
