நாளை புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படமாட்டாது... திடீரென வெளியான பரபரப்பு அறிவிப்பு... காரணம் என்ன?
கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் மேற்கொள்ளப்பட்ட தளர்வுகற்ற ஊரடங்கு நடவடிக்கைகளால் கொரோனா தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. தற்போது நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமான அளவே இருப்பதால், பள்ளிகளை திறப்பது தொடர்பாக புதுச்சேரி அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா பட்டியலை சமர்ப்பிப்பதற்காக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்தார். சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறிய அவர், செய்தியாளர்களிடம் வரும் ஜூலை 16ம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக ஆயத்த பணிகளில் இறங்கினர். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்தார். நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது குறித்து அமைச்சர் நமச்சிவாயம், துணை நிலை ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து, புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.