ஸ்டாலினை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வரும் முயற்சியை செய்தியாளர்களிடம் லீக் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

ஸ்டாலினை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வரும் முயற்சியை செய்தியாளர்களிடம் லீக் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி என அ.தி.மு.கவின் முக்கிய புள்ளிகளை குறி வைத்து தி.மு.க ஊழல் புகார்கள் கூறி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் நீதிமன்றம் சென்று அமைச்சர்கள் மீதான புகார் தொடர்புடைய விசாரணைகளையும் தி.மு.க சட்டப்பிரிவு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலினை ஊழல் வழக்கில் கைது செய்ய கடந்த ஒரு மாத காலமாகவே அ.தி.மு.க அரசு திட்டமிட்டு வருகிறது. ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே நீதிபதி ரகுபதி கமிசன் விசாரித்து வந்த புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவசர அவசரமாக மாற்றியது அ.தி.மு.க அரசு அதுமட்டும் இன்றி. புதிய தலைமைச் செயலகம் கட்டியதன் மூலம் தமிழக அரசுக்கு சுமார் 379 கோடி ரூபாயை தி.மு.க அரசு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி அறிக்கை கொடுத்துள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. 

ஆனால் இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் ஸ்டாலின் உடனடியாக கைது செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. ஆனால் அந்த இடைக்கால தடையை நீக்கி ஸ்டாலினை கைது செய்வது குறித்து தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்களும் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் கடந்த ஒரு வார காலமாகவே தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்த முறை விசாரணையின் போது இடைக்கால தடை நீங்கும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை நம்புகிறது.

தடை நீங்கியதும் ஸ்டாலினை கைது செய்துவிடலாம் என்றும் கணக்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய தலைமைச் செயலக ஊழல் வழக்கில் ஸ்டாலின் கைது செய்யப்படுவார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்ததுமே அதிகாரிகள் அப்செட் ஆகியுள்ளனர். 

ஏனென்றால் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக கூறியிருப்பது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை கருதுகிறது. மேலும் ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றம் ஏகப்பட்ட கேள்விகளை கேட்கிறது. இந்த நிலையில் கைது நடவடிக்கை குறித்து அமைச்சர் பேசியிருப்பது விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.