+2 மதிப்பெண்களில் திருப்தி இல்லையா?... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்...!
தற்போது வெளியான மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்தப்படும்.
கொரோனா 2வது அலை காரணமாக கடந்த மே மாதம் நடைபெறவிருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனை தொடர்ந்து உயர் கல்வி சேர்க்கைக்காக +2 மதிப்பெண்கள் கட்டாயம் தேவை என்பதால், அதனை எவ்வாறு கணக்கீடுவது என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைக்களை மேற்கொண்டது தமிழக அரசு.
அதன் பின்னர் 10 ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண்களில் இருந்து 50 சதவீதம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களை சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளார். +2 தேர்வெழுதிய 8.06 லட்சம் மாணவர்களும் ஆல் பாஸ் ஆனதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் கல்வி விவகாரத்தில் கல்வி விவகாரத்தில் கவனம் செலுத்தி வந்ததாக தெரிவித்தார். 11ம் வகுப்பில் எந்த தேர்வும் எழுதாத 1,656 பேர் தேர்ச்சி பெறாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வரும் 22ம் தேதி மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வெளியான மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு தேர்வு எழுத முடியாதவர்கள், தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 40 ஆயிரம் பேருக்கு கொரோனா சூழ்நிலையைப் பொறுத்து வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.