பசும் பாலில் தங்கம் …. பசு மாடுகளை ஓட்டிவந்து நகைக்கடன் கேட்டு அதிர வைத்த விவசாயி !!
மேற்கு வங்க பாஜக தலைவர் பசும் பாலில் தங்கம் இருப்பதாக கூறியதையடுத்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது இரண்டு மாடுகளை நிதி நிறுவனத்துக்கு ஓட்டி வந்து நகைக்கடன் கேட்ட சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், ”இந்தியப் பசுக்களின் பாலில் சிறிது மஞ்சள் நிறம் இருப்பதற்கு காரணம் அதில் தங்கம் இருப்பதே ஆகும். பசுக்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்கிறது.
இந்த பாலில் ஏராளமான எதிர்ப்புச் சக்தி உள்ளது. ஒரு மனிதன் பாலை மட்டும் உட்கொண்டு உயிர் வாழ முடியும். வேறு எந்த உணவும் தேவைப்படாது” என்று கூறி இந்தியாவையே அதிர வைத்தார்.
இந்த நிலையில் அந்த மாநிலம் , தன்குனி பகுதியில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்துக்கு வந்த ஒரு விவசாயி தன்னுடைய இரு மாடுகளை வைத்துக் கொண்டு தங்கக் கடன் கேட்டு அதிகாரிகளை அதிர வைத்தார். அதிகாரிகள் விவசாயியை வினோதமாக பார்த்தவுடன் அவர்களிடம், மாட்டுப்பாலில் தங்கம் இருப்பதாக பாஜக தலைவரே கூறியிருக்கிறார்.
எனவே இந்த பசுக்களை வைத்துக் கொண்டு தங்கக் கடன் கொடுத்தால் எனது தொழிலை முன்னேற்ற உதவியாக இருக்கும்” என்று சீரியசாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாள்தோறும் கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு பசு மாடுகளுடன் வரும் பொது மக்கள் தங்களுக்கு எவ்வளவு தங்கக் கடன் கிடைக்கும் என்று கேட்பதாக பஞ்சாயத்து தலைவர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் மதம் மற்றும் இந்துத்துவா பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். இது எங்கு போள் முடியுமோ என பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.