கதறி அழும் கபினி….. 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு… ஜிவு..ஜிவு என உயரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் …80 அடியைத் தொட்டது...
கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழையால் கபினி அணைக்கு 55 ஆயிரம் கனஅடி நீத் வந்து கொண்டிருப்பதால் அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதே போன்று கேஆர்எஸ் அணையும் அதன் முழு கொள்ளவை எட்ட உள்ளதால் அங்கிருந்தும் 5000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 80 அடியை எட்டியுள்ளது.
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பேய்து வரும் தென்மேற்கு பருவமழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது.
கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அந்த அணைக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 120.20 அடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் இரு தினங்களில் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று ஹாரங்கி. ஹேமாவதி மற்றும் கபினி அணைகளின் நீர் மட்டமும் முழு அளவை எட்டியுள்ளன.
இந்த 4 அணைகளில் இருந்து மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு போக, உபரி நீராக வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இதே நாளில் 78.65 அடி மட்டுமே நீர் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு கனமழை பெய்ததால் 120 அடியை எட்டியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணராஜசாகர் அணை 120 அடியை கடந்துள்ளது. இதே போல கபினி அணைக்கும் 10 ஆண்டுகளுக்கு பிறகு வினாடிக்கு சுமார் 55 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனால் முதலமைச்சர் குமாரசாமி வரும் 20-ம் தேதி மைசூரு வந்து கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் சிறப்பு பூஜை செய்ய திட்டமிட்டுள்ளார். ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளிலும் பூஜை செய்த பிறகு, பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்படும் என காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காவிரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 7.69 டி.எம்.சி அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 79.45 அடியாக உள்ளது. நீர் திறப்பு 1000 கன அடியாக உள்ளது. நீர் திறப்பு 41.41 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 46,613 கன அடியாக உள்ளது. நிச்சயமாக இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்துவிடலாம் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்து ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.