இது எங்க ஏரியா உள்ள வராதே… சிபிஐ அதிகாரிகளையே அரெஸ்ட் பண்ணி கெத்து காட்டிய மம்தா பானர்ஜி….
தி ரோஸ் வேலி மற்றும் சாரதா சிட் பண்டு ஊழல் வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸ் அதிரடியாக கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ உள்ள வரக்கூடாது என்ற மேற்கு வங்க முதலமைச்சரின் ஆணையை மீறியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் தி ரோஸ் வேலி மற்றும் சாரதா சிட் பண்டு ஊழல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொல்கத்தா நகர கமிஷனர் ராஜிவ் குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை விசாரிக்க சிபிஐ முயற்சி செய்தது வருகிறது. மேலும் ராஜிவ் குமாரை கைது செய்யவும் சிபிஐ முடிவு செய்துள்ளது.
ஆனால் மேற்கு வங்க மாநிலத்துக்குள் சிபிஐ நுழைய மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார். அங்கு மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே சிபிஐ நுழைய முடியும். அதே போல் மாநில அரசின் அனுமதி இல்லாமல் அங்கு யாரையும் சிபிஐ விசாரிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியாது.
இந்த நிலையில்தான் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய அவரது இல்லம் நோக்கி 40 சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அவர்களில் 5 சிபிஐ அதிகாரிகள் மட்டும் வீட்டுக்குள் செல்ல முயன்றனர்.
ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த லோக்கல் போலீசார் சிபிஐ அதிகாரிகள் குழுவை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்தனர்.
போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.