பாபு காரு…கோர்ட்ல ஆஜராகலன்னா கடும் நடவடிக்கைதான்.. சந்திர பாபு நாயுடுவை மிரட்டும் பாப்லி வழக்கு…..
பாப்லி அணை பிரச்சனையில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு வரும் 15 ஆம் தேதி ஆஜராகவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்ட்ரா மாநிலம் தர்மாபாத் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், பாப்லியில் உள்ள அணையை அம்மாநில அரசு உயர்த்துவதற்கு, அப்போதைய ஆந்திர எதிர்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பாப்லி அணையை பார்வையிட சென்ற சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 40 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவை இன்று கைது செய்ய தர்மாபாத் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு கைது வாரண்ட்டுக்கான நோட்டீஸ் கிடைக்கவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு, தலா 5 ஆயிரம் அபராதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேரும் வரும் 15-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.