ஏன் பயப்படணும்... தைரியம் இருந்தா கேஸ்போடு... நான் வீடியோ வெளியிடுறேன்... விஜய் சேதுபதிக்கு மகாகாந்தி சவால்!
உண்மையில் என் மீது தவறு இருந்தால் விஜய்சேதுபதி சட்டப்படி என் மீது வழக்குத் தொடரட்டும். அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா?
உண்மையில் என் மீது தவறு இருந்தால் விஜய்சேதுபதி சட்டப்படி என் மீது வழக்குத் தொடரட்டும். அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? என பெங்களூரு சர்ச்சை மகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார். அப்போது விமான நிலையத்திற்கு சென்ற போது, அங்கு நடிகர் விஜய்சேதுபதியை ஒரு நபர் வந்து உதைத்ததாகக் கூறப்பட்டது. இது அங்குள்ளவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டதால் உடனே இணையதளத்தில் வைரல் ஆனது.
இதனால், விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் கொடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ’’தாக்கிய நபர் குடிபோதையில் இருந்தார். அவர் மாஸ்க் அணிந்திருந்ததால் அது வெளியே தெரியவில்லை. செல்போனில் ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் ஊதி பெரிதாக்கப்பட்டது. தாக்கிய நபரை காவல் நிலையம் அழைத்துப் போய் அப்போதே பிரச்சனை தீர்க்கப்பட்டது.
நான் பாதுகாவலர்களுடன் பயணம் செய்வதில்லை. என்னுடைய நெருங்கிய நண்பரைத்தான் அழைத்துச் சென்றேன். பாதுகாவலர்களை வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மகா காந்தியின் விளக்கம் வேறு மாதிரியாக இருக்கிறது. விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னாராம். பிறகு குரு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றி, விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும், தான் திருப்பி தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் விஜய் சேதுபதி ஆதரவாளர்கள், ‘’பொதுவெளியில் தன்னை அறியாத ஒருவரிடம் குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்பது அத்துமீறல். குரு பூஜை என்பது தனிப்பட்ட சாதியினர் மட்டுமே நடத்தும் ஒரு நிகழ்வு. அதில் கலந்து கொள்ள வருகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் நடத்திய அத்துமீறல்களுக்காக பலரை காவல்துறை கைது செய்து வழக்கு தொடர்ந்திருக்கிறது. அப்படியொரு நிகழ்வு குறித்து தன்னை அறியாத விஜய் சேதுபதியிடம் கேட்பது அத்துமீறிய செயலே.
குறிப்பிட்ட சாதியினரின் ஆதரவு தனக்கு கிடைக்கவும், அவர்களை விஜய் சேதுபதிக்கு எதிராக திருப்பி விடவும் அந்த நபர் குரு பூஜை குறித்து கேட்டதாக பொய்யாக சொல்லியிருக்கவும் வாய்ப்புள்ளது. எப்படியிருப்பினும் தவறு விஜய் சேதுபதி மேல் அல்ல’’ என்கிறார்கள்.
ஆனால் இதனை அடியோடு மறுக்கும் மகாகாந்தி, ‘’அவர்கள் என்னை குடிகாரராக சித்தரிக்கப் பார்க்கிறார்கள். நான் ஆன்மீகத்தையும், தேசியத்தையும் போற்றுபவன். தாமதமாக அவர்கள் விளக்கம் கொடுக்கும்போதே அவர்கள் பக்கத்தில் குற்றம் இருப்பதை உள்வாங்கி கொள்ள முடியும். அவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தில் தேவர், தேசியத்தை பற்றி தான் கருத்துக் கூறவில்லை என்பது பற்றி விஜய்சேதுபதி விளக்கமளிக்கவில்லை.
விமானத்தில் நடந்த சம்பவம் குறித்த வீடியோவை கேட்டுள்ளேன். அந்த வீடியோவில் என்ன நடந்தது என்பது பதிவாகி இருக்கும். அந்த வீடியோவை கேட்டு அனுமதிக் கடிதம் கொடுத்துள்ளேன். என் மீது தவறு இருந்தால் அந்த வீடியோவை கேட்டு கடிதம் கொடுத்திருப்பேனா? உண்மையில் என் மீது தவறு இருந்தால் விஜய்சேதுபதி சட்டப்படி என் மீது வழக்குத் தொடரட்டும். அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? ஆனால், நான் அந்த வீடியோ கிடைத்த உடன் தைரியமாக வெளியிடுவேன்’’ என உறுதியாக கூறுகிறார்.