கொரோனா பரவாமல் இருக்க மாமிசத்தைத் தவிர்க்கணும்... மதுரை ஆதினத்தின் அதிரடி யோசனை!
“பிராணிகளைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பது பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளது. எத்தனை பூஜைகள் செய்தாலும், கோவில்களுக்குச் சென்று வழிபட்டாலும், யாகங்கள், ஹோமங்கள் நடத்தினாலும் மாமிச உணவுகளை தவிர்க்காத வரை எந்த பலனும் கிடைக்காது."
கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவுவதை தவிர்க்கவும், நோயின்றி வாழவும் மனித சமூகம் மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் ஏற்பட என்ன காரணம் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில், “பிராணிகளைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பது பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளது. எத்தனை பூஜைகள் செய்தாலும், கோவில்களுக்குச் சென்று வழிபட்டாலும், யாகங்கள், ஹோமங்கள் நடத்தினாலும் மாமிச உணவுகளை தவிர்க்காத வரை எந்த பலனும் கிடைக்காது.
இதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகிய குறள்கள் வாயிலாக வலியுறுத்தி உள்ளார். உலகில் எந்தக் கடவுளும் மாமிசத்தைப் படைத்து வழிபட வேண்டும் என்று கூறவில்லை. மனிதனின் விருப்பம் மற்றும் ருசிக்காக கடவுளை காரணமாகக் கூறக்கூடாது. ஒரு பிராணியின் உயிரை எடுக்க எந்த ஒரு மனிதருக்கும் உரிமை இல்லை. மேலும் மாமிச உணவுகள் மூலம் கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவுவதை தவிர்க்கவும், நோயின்றி வாழவும் உலகில் உள்ள மனித சமூகம் மாமிச உணவுகளை தவிர்த்து காய்கனி, கீரை, தானியங்கள் போன்ற சாத்வீக உணவுகளை உண்ணும் பழக்கத்துக்கு மாற வேண்டும்.” என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.