சவுக்கு சங்கரால 15 கோடி போச்சி... கோர்ட்டில் கதறிய ஜி ஸ்கொயர்.. அவதூறு பேச தடை விதித்த நீதிமன்றம்.
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜீ ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் நிறுவனத்திற்கு எதிராக சவுக்கு சங்கர் அவதூறாக கூறிவரும் கருத்துக்களால் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
யூடியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில், சமூக அரசியல் குறித்து விமர்சனங்களை முன் வைத்து வருபவர் சவுக்கு சங்கர். மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகராகவும் இருந்துவருகிறார். பல்வேறு யூடியூப் சேனல்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை கூறிவருகிறார், சவுக்கு சங்கருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நான் சமீபத்தில் ஜி ஸ்கொயர் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார். இந்நிலையில்தான் சவுக்கு சங்கர் தங்கள் நிறுவனத்துக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறி வருவதாகவும் அவர் இனி அவதூறு கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் சார்பில் அதிகாரம் பெற்ற நபரான என். விவேகானந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், எங்கள் நிறுவனத்தை குறித்து சவுக்கு சங்கர் கூறிவரும் அவதூறு கருத்தால் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள் 28 பேர் முன்பதிவு ரத்து செய்துவிட்டனர்.
இதனால் எங்கள் நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு 15 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை திரும்ப அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்று எங்கள் நிறுவனத்திற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது இல்லை, எனவே எங்கள் நிறுவனம் குறித்து அவதூறு கருத்து பரப்பிவரும் சவுக்கு சங்கருக்கு 1 கோடியோ 10 ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி தொடர்ந்து ஜி ஸ்கொயர்நிறுவனம் குறித்தும், தொழில் குறித்த சவுக்கு சங்கர் அவதூறு பரப்பி வருவதாக அந்நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது, அதேபோல் பொள்ளாச்சியில் எங்கள் நிறுவனத்திற்கு எந்தவிதமான திட்டமும் இல்லாத நிலையில் முதலமைச்சர் பயணத்தை எங்களது நிறுவனத்துடன் தொடர்பு படுத்தி சவுக்கு சங்கர் பேசியிருப்பதாக ஜி ஸ்கொயர் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி கார்த்திகேயன் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர் பேச தடை விதித்தார். மேலும் தங்களது மனுவுக்கு பதிலளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.