AIADMK: திமுகவில் இணைகிறாரா மாஃபா பாண்டியராஜன்? அவரே வெளியிட்ட முக்கிய தகவல்..!
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசும்போது, 2 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் என புகழ்ந்து பேசினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 140-வதுபிறந்த நாளையொட்டி, சென்னைதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே ஜதி பல்லக்கு ஊர்வலத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசும்போது, 2 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் என புகழ்ந்து பேசினார்.
இதனையடுத்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது;- வசை பாடுபவர்களையும் வாழ்த்தச் செய்யும் அரசாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தவறு செய்வது தன்னுடைய கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, நீதிபதிகள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் எதிர்காலத்தில் திமுகவோடு இணைந்து செயல்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, அனைத்து தரப்பினரும் முதலமைச்சரை பின்பற்றுமளவிற்கு அவரது செயல்பாடு உள்ளது. அந்த வகையில் யார் வேண்டுமானாலும் திமுகவில் இணைந்து செயல்படலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் எதிர்காலத்தில் எங்களோடு இணைந்து செயல்படுவது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் விரைவில் திமுக இணைய உள்ளதாக தகவல் வெளியாகின. இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சர்ச்சைகள் அனைத்துக்கும் ஒரே வரியில் பாண்டியராஜன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவரது முகநூல் பக்கத்தில்;- புரட்சித்தலைவியின் அன்பாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டு 12/6/13 அன்று கழகத்தில் இணைந்த நாள் முதல் இன்று வரை அதிமுகவின் விசுவாசத் தொண்டனாக பணியாற்றி வருகிறேன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக வெற்றிக்குப் பாடுபடுவேன் எனப் பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.