இதெல்லாம் அலட்சியத்தின் அடையாளம்.. அரசு மருத்துவரின் மரணத்தால் எடப்பாடியாரை எச்சரிக்கும் ஸ்டாலின்!
முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட, இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்துகிறேன். அரசுத் தலைமை மருத்துவர் சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்
செங்கல்பட்டு அரசு மருத்துவரின் மரணம், கொரோனா சிகிச்சையில் முன்கள வீரர்களாக இருப்போரைப் பாதுகாப்பதில் அதிமுக ஆட்சி தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளமாகும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றிவந்த டாக்டர் சுகுமார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் மரணம்- கொரோனா சிகிச்சையில் முன்கள வீரர்களாக இருப்போரைப் பாதுகாப்பதில் அதிமுக ஆட்சி தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளமாகும். அரசின் இதுபோன்ற தோல்விகள், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
ஆகவே முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட, இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்துகிறேன். அரசுத் தலைமை மருத்துவர் சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.