கோவைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், உள்ளாட்சித் துறை அமைச்சரின் ‘தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள்’ போல் செயல்படுகிறார்கள் என்பது தமிழக காவல்துறைக்கே தலைகுனிவு. போலீஸ் துறையின் அறிவிக்கப்படாத துறை அமைச்சராக, தன் கட்டளை கேட்டு நடப்பவர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்டத்திற்கு மாறுதல் அனுமதி கொடுப்பவராக, வேலுமணி செயல்படுகிறாரா என்ற சந்தேகம் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும் கோவை மக்களுக்கும் எழுந்துள்ளது. 

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவிக்கு எஞ்சியிருக்கும் காலம் இன்னும் பதினெட்டு மாதங்கள்தான். அதன் பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்காக திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடும் காவல்துறை அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


 “கோவை மாவட்டத்தில் அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராமசபைக் கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பற்றிப் பேசியதற்காக திமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் ஏ.வி.முத்துலிங்கத்தைக் கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிராமசபை என்பது மக்களின் சுதந்திரமான கருத்துகளை, எண்ணங்களை உள்ளது உள்ளபடிப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான கருத்துக்கேட்கும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒரு முன்னாள் கவுன்சிலர் என்ற முறையில் உரிமையுடன் ஒரு கருத்தைக் கூறும்போது, அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து - அதன் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வு காண்பதுதான் உள்ளாட்சித் துறை அமைச்சரின் பணி.
ஆனால் இங்கே உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் தலையில் ‘அதிகாரம்’ என்ற ‘ஆணவம்’ ஏறிக் கூடுகட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ கைது என்ற அடக்குமுறையை ஏவி விடுவது மிகவும் வெட்கக்கேடு. அண்மைக் காலமாக கோவையிலும் தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு எதிராக, ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால் பத்திரிகையாளரைக் கைது செய்வது, வழக்குப் போட்டால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் திமுகவினரைச் சிறைப் பிடிப்பது என அட்டூழியத்திலும் அராஜகமான நடவடிக்கைகளிலும் சில காவல்துறை அதிகாரிகள் ‘பேயாட்டம்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, கோவைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், உள்ளாட்சித் துறை அமைச்சரின் ‘தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள்’ போல் செயல்படுகிறார்கள் என்பது தமிழக காவல்துறைக்கே தலைகுனிவு. போலீஸ் துறையின் அறிவிக்கப்படாத துறை அமைச்சராக, தன் கட்டளை கேட்டு நடப்பவர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்டத்திற்கு மாறுதல் அனுமதி கொடுப்பவராக, வேலுமணி செயல்படுகிறாரா என்ற சந்தேகம் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும் கோவை மக்களுக்கும் எழுந்துள்ளது.