தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு,எதிர்காலமே இல்லாத கட்சியாக விளங்கி வரும் பாஜக,மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த மக்களவைக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி , 'தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது' என்று அறுதியிட்டுக் கூறியதை தமிழக மக்கள் உறுதியிட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பாஜகவை தமிழக மக்கள் மீண்டும் நிராகரித்து புறக்கணித்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கிற நீட் தேர்வை ஆதரிக்கிற ஒரே கட்சியான பாஜகவுக்கு தமிழக வாக்காளர்கள் உரிய பாடத்தைப் புகட்டியிருக்கிறார்கள்.
நடைபெற்று வருகிற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிற பாஜக, தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைவிட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்கமுடியாத வாதமாகும்.
மேலும், 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பெற்ற இடங்களை விட தற்போது 2022 தேர்தலில் 0.7 சதவீத இடங்களை மட்டுமே அதிகமாக பெற்ற பாஜக, மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அதுமட்டுமல்லாமல், நடைபெற்ற தேர்தலில் பத்து மாவட்டங்களில் வெற்றிக் கணக்கையே தொடங்காத பாஜக, காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
ஆனால், 2011-ல் தனித்து போட்டியிட்ட போது 2.07 சதவீத இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 2022 மாநகராட்சித் தேர்தலில் 59.34 சதவீத இடங்களையும், நகராட்சித் தேர்தலில் 4.4 சதவீத இடங்களிலிருந்து தற்போது, 38.32 சதவீத இடங்களையும் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிடுவதை இனியாவது அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற பாஜக எதிர்ப்புகளை எந்த காலத்திலும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. ஏனெனில், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக பாஜக செயல்பட்டு வருவதால் எதிர்காலமே இல்லாத கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இதனால்தான் இக்கட்சியோடு கூட்டணி வைக்க அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் தயாராக இல்லை.
தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலமே படுதோல்வியைக் கண்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
இனி வரும் காலங்களில் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் மக்கள் வழங்குவார்கள் என்பது இந்தத் தேர்தல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
