முதல்ல அறிவிச்ச தேதியில ரஜினி கட்சி தொடங்கட்டும்... ரஜினி விவகாரத்துல சூதானமா நடக்கும் அதிமுக..!
நடிகர் ரஜினிகாந்த் முதலில் அறிவித்த தேதியில் கட்சியைத் தொடங்கட்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் முதலில் அறிவித்த தேதியில் கட்சியைத் தொடங்கட்டும். அவருடைய கொள்கைகள் திராவிட இயக்கத்துடன் ஒத்துப் போகிறாதா எனப் பார்ப்போம். பிறகுதான் ரஜினி குறித்து எங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி ஆ.ராஜா தெரிவித்த கருத்துகள் ஏற்புடையது அல்ல. அவர் அரசியல் நாகரிகத்துடன் பேசத் தெரியாத ஒரு முன்னாள் மத்திய அமைச்சர். இதுபோன்ற கருத்துக்களுக்கு எங்களைப் போன்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என கருதுகிறேன்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆ. ராஜா. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அவருடன் விவாதிப்பது எங்களுடைய வேலை அல்ல, ஆனாலும், ஆ. ராஜாவுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். தமிழகத்தில் அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலப்பணி திட்டங்கள் மற்றும், கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயார். இதற்கு ஆ. ராஜா தயாரா? மு.க. ஸ்டாலின் தயாரா? ஆ. ராஜாவுடைய வழக்கைப் பற்றியெல்லாம் விவாதம் செய்ய தேவை இல்லை. இந்த வழக்கில் ஆ. ராஜா சிறையில் இருந்தவர். தற்போது அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.