திரிபுராவில் இன்று லெனின் சிலை...! தமிழகத்தில் நாளை பெரியார் சிலை...! ஹெச்.ராஜாவின் மிரட்டல் டுவிட்!
திரிபுரா மாநிலத்தில் பாஜகவினரால் லெனின் சிலை அகற்றப்பட்ட நிலையில், நாளை தமிழகத்தில் உள்ள் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவிடம் வீழ்ந்தது.
கடந்த 2013 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியினரால் நிறுவப்பட்ட லெனின் சிலையை பாஜகவினர் இன்று காலை அகற்றியுள்ளனர். பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டவாரு, பாஜக தொண்டர்கள் லெனினின் சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில், லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை... தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா. சிலை என்று ராஜா குறிப்பிட்டுள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம் என்று கண்டனங்களும் குவிந்து வருகின்றன.