திருக்குறள் பேசினால் மட்டும் போதாது நடைமுறையிலும் வேண்டும்... மோடியை சாடும் கே.எஸ். அழகிரி!!
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் காவேரி நீர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் காவேரி நீர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், மேகதாது அணை பிரச்சினை மீண்டும் தலைவிரித்து ஆடுகிறது. இந்த எதிர்ப்புக்கு காரணம் அரசியல் இல்லை. மேகதாது அணை குறுக்கே அணை கட்டினால், காவேரிக்கு வரும் கசிவு நீர் தடைப்படும். இதனால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும். கர்நாடக மாநில அரசு வரைவு திட்டம் அளித்தபோது. மத்திய அரசு, தமிழக அரசிடம் விவாதித்து தான் முடிவு எடுத்திருக்கவேண்டும். ஆனால், மத்திய அரசு, தமிழக அரசிடம் கேட்காமல் ஒப்புதல் அளித்தது. அப்போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடி கே. பழனிச்சாமி இருந்தார். இதுதொடர்பாக அவரும் பெயர் அளவில் தான் அறிக்கை விட்டாரே தவிர வேற எதுவும் செய்யவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும். மோடி அரசை நம்பக்கூடாது.
கர்நாடக அரசின் நடவடிக்கையை பொருத்து, இன்னும் 15 நாள்கள் கழித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் காவேரி நீர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெறும். கோவையில் ஜவுளி தொழிலாளர்கள் கடந்த 10 நாள்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ,தென்னிந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுவது உடன், தமிழகத்தின் ஜி.டி.பி யும் சரிவை சந்ததிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் நூல் விலையை நிர்ணயம் செய்வதற்கு 7 பெரும் முதலாளிகள் உள்ளனர். கோவையில் பஞ்சு விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது.ஆஸ்திரேலியாவில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்ய முயற்சி எடுத்தார்கள் ஆனால் கைவிடப்பட்டது. தொழிலதிபர் அம்பானி வருமானம் 1,800 சதவீதம் அதிகரித்துள்ளது. அமைதியாக, இந்த தேசத்தை ஒரு கூட்டம் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது. தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அம்பானி வருமானம் குறித்த நேர்மையான விளக்கத்தை அளிக்க முடியுமா? தமிழகத்தில் வந்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கின்ற திட்டம் புதியதாக இருக்க வேண்டும்.
செயல்பாட்டில் இருக்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். பாரதிய ஜனதா கட்சி அதனை திருத்திக் கொள்ள வேண்டும். தமிழகம் வரும்போது பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள், பாரதியார் கவிதைகளை பேசுகிறார். பேசினால் மட்டும் போதாது அது நடைமுறையிலும் வேண்டும். இந்தியாவில், 140 கோடி மக்களில் 24,823 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு 643 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிக்கு 29 கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் கலாச்சாரத்திற்கு எதிராக நடக்கிறது. இதற்கு தமிழக பாஜக என்ன பதில் சொல்லபோகிறது. தமிழகத்திற்கு கடந்த 8 ஆண்டுகளில் பாஜக எந்த திட்டம் கொண்டு வந்தது என்று சொல்லவேண்டும். காங்கிரஸ் கட்சி எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. இந்தி மொழி திணிப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள். ஹஜ் பயணிகள் தமிழகத்தில் இருந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.