கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. புது தனிப்படைகள் அமைப்பு.. இனி பலர் சிக்க வாய்ப்பு..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க ஏற்கனவே ஒரு தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என போலீசாரும், இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை அளிக்க உள்ளதாக சயானும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து, சாயனிடம் கடந்த 17ம் தேதி 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், சயான் கொடுத்த புதிய வாக்குமூலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பெரும் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்குமூலத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் வாக்குமூலம் அளித்தததாகவும், சில முக்கியமான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பான வழக்கில் புலன் விசாரணைக்கும் ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், திடீர் திருப்பமாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏற்கனவே ஒரு தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், டிஎஸ்பி சந்திரசேகர், சுரேஷ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்டோர் தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். கொடநாடு வழக்கில் வேகமாக விசாரணை நடத்தவே தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இனி பலர் சிக்க வாய்ப்புகள் உள்ளது. பலருக்கு குறி வைக்கப்படலாம், வழக்கு விசாரணை வேகமாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சம்பவத்தன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் இருக்கும் பகுதி என்பதால் அந்த பகுதியில் மின்துண்டிப்பு என்பதே நடைபெறாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி மின்துண்டிப்பு நடைபெற்றது என்பதால் இந்த வழக்கில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், கொள்ளை, கொலை நடந்தபோது மின்சார அலுவலகத்தில் பணியில் இருந்தோர் விவரத்தை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.