சமூக வலைதளங்களில் தான் தெரிவிக்காத கருத்துக்களை சிலர் அவதூறாக பரப்புவதாக கூறி நடிகரும், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து சசிகலா தரப்பின் பக்கம் நின்றவர் கருணாஸ்.

முதலமைச்சரை மக்கள் தேர்வு செய்ய தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்னர், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகர் கருணாஸ் கூறியதாக, ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. இதனால் பல பேர் கருணாஸை விமர்சித்து கருத்துக்கள் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் கூறியதாவது:

முதலமைச்சர் தேர்வு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நான் கூறாத கருத்தை கூறியதாக சில பேர் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பி வருகின்றனர்.

நான் ஒரு சமூகத்தை சார்ந்த இயக்கம் நடத்தி வந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்து தான் செல்கிறேன்.

நான் சட்டமன்ற உறுப்பினரானது எனது சமூகத்தில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை. இந்த தொகுதியில் வாக்களிககதவர்கள் எண்ணிக்கை 80,000 பேர்.

எனக்கு வாக்களித்த 76, 786 மக்களுக்காக நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன். நான் எந்த கருத்தை தெரிவிப்பதாக இருந்தாலும், வெளிப்படையாகவே தெரிவிப்பேன்.

எனவே, சமூக வலைதளங்களில் நான் கூறியதாக ஏதேனும் கருத்து வந்தால் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.