"தன்னை முன்னிலைப்படுத்தவே போராட்டத்தை அறிவித்துள்ளார் ஓ.பி.எஸ்" - கருணாஸ் பேட்டி!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை முன்னிலைப்படுத்தவே வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளதாக எம்.எல்.ஏ. கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக புரட்சி தலைவி அணி நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை, நீட் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து, இம்மாதம் 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை ஓ.பி.எஸ். அணி அறிவித்துள்ளது.
இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுசூதனன், கே.பி. முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டிடிவி தினகரன், நேற்று கட்சி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், ஓ.பி.எஸ். அணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், தடையை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை முதன்மைப்படுத்தவே போராட்டத்தை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர் கட்சியை பலப்படுத்தவே டிடிவி தினகரன் சிலருக்கு பதவிகள் வழங்கியதாகவும் கூறினார்.