கருணாநிதிக்காக கதறி அழுத கலைஞர் அரங்கம்… உணர்ச்சிப் பிழம்பான அவசர செயற்குழுக் கூட்டம்….
கருணாநிதிக்காக கதறி அழுத கலைஞர் அரங்கம்… உணர்ச்சிப் பிழம்பான அவசர செயற்குழுக் கூட்டம்….
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்ததையடுத்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்பு.
திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் அதிகரித்ததால் அரங்கம் நிரம்பி வெளியே நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர். அவர்கள் வசதிக்காக எல்இடி டிவிகள் வைக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை டி.கே.எஸ். இளங்கோவன் கண்ணீருடன் வாசித்தார்.
இதையடுத்து அந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய தலைமை நிலையச் செயலாளர் துரை முருகன் கருணாநிதியுடன்ன தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அரங்கில் இருந்த அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தேம்பித் தேம்பி அழுதனர்.
இதையடுத்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அழுது கொண்டே பேசினார். திமுகவின் முதன்மை நிர்வாகிகள் அனைவரும் அழுது கொண்டே பேசினார்கள். தொடர்ந்து கருணாநிதிக்காக அந்த கலைஞர் அரங்கமே அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.