தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கிய அறையில் தங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை முதன் முறையாகச் சந்திப்பதற்காக நாளை டெல்லி செல்கிறார். முதல்வராக முதன்முறையாக டெல்லி வரும் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு சிறப்புப் பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக மக்களவைக் குழுத் தலைவர் டிஆர்பாலு தலைமையில் திமுக எம்பிக்கள் வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் செல்லும் மு.க. ஸ்டாலின் காவல் துறை மரியாதை அளிக்கப்பட உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சூட் ரூமில் தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு இல்லத்துக்கு பலமுறை வந்திருந்தாலும், ஜெயலலிதா தங்கிய அறையைத் தங்கவில்லை. இருவரும் அமைச்சர்களுக்கான அறையில் மட்டுமே தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 
தற்போது அந்த அறையில்தான் முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல மு.கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய கார் டெல்லியில் உள்ள திமுக எம்.பி. வீட்டில்தான் உள்ளது. தனது தந்தை கருணாநிதி பயன்படுத்திய இந்த காரைதான் ஸ்டாலின் பயன்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள அந்த கார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.