இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள ஒரு வேட்பாளரை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரை முன்மொழிந்திருக்கிறோம்.
துணை குடியரசு தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, ‘‘இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும்.
ஆர்.எஸ்.எஸ் பின்புறத்தில் இருந்து வந்த ஒருவரை தற்போது பாஜக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. அவர் ஒரு தமிழராக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக என்ன செய்தார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா? தமிழ்நாட்டையும், தமிழர்களையும் மதிக்காத பாஜக, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளர் ஆக்கிவிட்டதாலேயே ஆதரிக்க முடியுமா? பிளவுவாத அரசியல் இல்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தியுள்ளோம்.

நீதிபதி சுதர்சன் ரெட்டி பல்வேறு விவகாரங்களில் ஏழை மக்கள், நலிவடைந்தோர் நலன்சார்ந்து பல தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தற்போது அவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை சித்தாந்த போட்டியாகவே திமுக அணுகுகிறது. இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள ஒரு வேட்பாளரை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரை முன்மொழிந்திருக்கிறோம்.
துணை குடியரசுத் தலைவர் தேர்வின் இறுதி பட்டியலில் யார் யார் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக இறுதியாக ஒருமித்த கருத்தாக சுதர்சன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இதுவே இறுதியானது” என்று தெரிவித்தார்.
