’கணவர், மாமியாரை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வீடு திரும்புவேன்’...தலையில் அடி வாங்கிய கனகதுர்கா...
’சபரிமலைக்குச் சென்றால் வீட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று எனது குடும்பத்தினர் யாரும் சொன்னதில்லை. இப்போது அவர்கள் என்னை அனுமதிக்க மறுக்கும் நிலையில் சட்ட ரீதியாக வீடு திரும்பும் முயற்சிகளை மேற்கொள்வேன்’ என்கிறார் மாமியாரால் தாக்கப்பட்டு வீட்டை விட்டு விரட்டப்பட்ட கனகதுர்கா.
’சபரிமலைக்குச் சென்றால் வீட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று எனது குடும்பத்தினர் யாரும் சொன்னதில்லை. இப்போது அவர்கள் என்னை அனுமதிக்க மறுக்கும் நிலையில் சட்ட ரீதியாக வீடு திரும்பும் முயற்சிகளை மேற்கொள்வேன்’ என்கிறார் மாமியாரால் தாக்கப்பட்டு வீட்டை விட்டு விரட்டப்பட்ட கனகதுர்கா.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைவதற்கு கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், கனகதுர்கா தற்போது ஒரு தற்காலிக அரசாங்க தங்குமிடத்தில் தங்கியுள்ளார்.
38 வயதான கனகதுர்கா சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததன் மூலம் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக கூறி, அவரது மாமியார் அடித்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலிருந்து திரும்பியது முதல் அரசு தங்குமிடத்தில் கனகதுர்கா தங்கி வருகிறார்.
"வீட்டிற்கு நுழைவதற்கு எனது கணவர் அனுமதி மறுத்ததால் நான் அரசு தங்குமிடத்தில் தங்கி வருகிறேன். எனது கணவரை அரசியல் பின்புலம் கொண்டவர்கள் இயக்குவதாக நான் நினைக்கிறேன். சபரிமலைக்கு செல்லவேண்டுமென்ற எனது எண்ணத்தை குடும்பத்தினரிடம் முன்னதாகவே வெளிப்படுத்தினேன். எனது விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும், நான் கோயிலுக்குள் நுழைந்த அன்றே என்னை வீடு திரும்புமாறு கூறினர். நான் வீட்டிற்கு நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டேன் என்று அவர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை.நான் சபரிமலைக்கு செல்லப்போவது குறித்து எனது தம்பியிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், மற்ற குடும்பத்தாரை போன்று அவர் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, நான் அரசு தங்குமிடத்திற்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படும்போது கூட அவர் அனைத்து சட்டரீதியிலான உதவிகளை வழங்கியதுடன், தினமும் கைபேசியில் அழைத்து பேசுகிறார்" என்று கூறும் கனகதுர்கா, ‘வீடு திரும்புவதற்காக கணவர், மாமியார் உட்பட யாரிடமும் மன்னிப்புக் கேட்கும் உத்தேசமில்லை. சட்ட ரீதியாக அனுமதி வாங்கியே வீடு திரும்ப விரும்புகிறேன்’ என்கிறார்.கனகதுர்கா மீது தொடுக்கப்பட்டதாக கூறப்படும் வன்முறை, வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடக்கவுள்ளது.