கமல் கட்சியிலிருந்து விலகியது ஏன்?... கமீலா நாசர் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!
கமீலா நாசர் கட்சியில் இருந்து விலகியது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் அவரே அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளார்.
நடிகர் நாசரின் மனைவியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல மாநிலச் செயலாளருமாக இருந்தவர் கமீலா நாசர். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் களமிறங்கினார். வர உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட கமீலா நாசர் விருகம்பாக்கம் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் கமல் ஹாசன் கவிஞர் சினேகனை விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த கமீலா நாசர் தன் வீடு உள்ள சொந்த தொகுதியான விருகம்பாக்கத்தில் கூட பிரச்சாரத்திற்காக செல்லாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து கமீலா நாசர் கட்சியை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கமீலா நாசர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசர் விடுவிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கமீலா நாசர் கட்சியில் இருந்து விலகியது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் அவரே அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளார்.
அதில், என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன். நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.