"இந்த ஆட்சி 4 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்" - அமைச்சர் காமராஜ் உறுதி!!
நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய சொல்வது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் விபரீத ஆசை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பதவி விலக வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக, திருவாரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாட்டை அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 4 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும் என்றார்.
நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய சொல்வது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் விபரீத ஆசை என்றும் அதிமுக அரசு வலிமையோடும், பொலிவோடும் 4 ஆண்டுகள் நிறைவு செய்யும் என்றும் அவர் கூறினார்.