திமுகவிற்கு திடீர் ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்...!
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் முதல்முறையாக திமுகவுக்கு ஆதரவு குரலை எழுப்பியுள்ளார்.
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் முதல்முறையாக திமுகவுக்கு ஆதரவு குரலை எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் வீடியோ ஆதாரங்களுடன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து சபாநாயகர் தனபால் 3 அதிமுக எம்.எல்.ஏ.வுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இவர்கள் 3 பேர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக மு.க.ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த நோட்டீஸை சட்டப்பேரவை செயலாளரிடம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல், திமுக சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் மீது கமலும், கமல் மீது ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் முன்வைத்து வந்தனர். இந்நிலையில் திமுகவுக்கு கமல் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ''அ.தி.மு.க.,வின் 3 எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அவர்களது உட்கட்சி பிரச்னை,'' என்றும் வழக்கம்போல குழப்பினார்.