கமல் ஒரு பக்கா பிரிவினைவாதி: பிரித்து மேயும் ஆவின் பாலாஜி.....
தனது சினிமாவில் கூட கமல்ஹாசன் இப்படியொரு அழுத்தமான வில்லனை சந்தித்திருக்க மாட்டார், அந்தளவுக்கு நம்மவரை நாலா திசைகளிலும் நின்று நசுக்கி எடுக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கமல் என்ன சொன்னாலும் எதிரடி கொடுத்து அதிரடி செய்து கொண்டிருக்கிறார்.
அதில் உச்சமாக ‘கமலின் கொழுப்பெடுத்த நாக்கை அறுக்க வேண்டும்! ஓட ஓட விரட்டி கமலை உதைக்க வேண்டும்!’ என்று பாலாஜி கூறியதெல்லாம் பெரும் பதற்றத்தைக் கிளப்பிய வார்த்தைகள். இம்புட்டு பகீரை பற்ற வைத்த பிறகும் கூட மனிதர் அடங்கிப் போவதாய் தெரியவில்லை. கமல்ஹாசனை தொடர்ந்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கூட கமல்ஹாசனை ஒரு பிடி பிடித்திருப்பவர் “எனக்கும் கமலுக்கு பர்ஷனலா எந்த பிரச்னையுமில்லை. அவர் மக்கள் ஏற்றுக் கொள்ளாத முரண்பாடான கருத்துக்களை துவக்கத்திலிருந்தே சொல்லிட்டு இருக்கார்.
மத நல்லிணக்கத்தோட வாழக்கூடிய மண்ணில் அவரது கருத்து பிரளயத்தை உருவாக்குது. பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசும் கமலின் கருத்துக்கு எதிர் மற்றும் மாற்றுக் கருத்துக்களை நான் முன் வைக்கிறேன், அவ்வளவுதான். தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசுவது, இளைய சமுதாயத்தின் மத்தியில் விஷத்தைக் கக்குவதற்கு சமம். அதனால்தான் அவரைக் கண்டிக்கிறேன்.
கமல் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு, எல்லா மதத்தினருக்கும் பொதுவானவராக இருக்கணும். மற்றவங்களை குறைசொல்லி மட்டுமே அரசியல் நடத்தாமல், தன் மீதான குற்றங்களையும் பார்த்து நடுநிலையோடு அவர் பேசணும் அவ்வளவுதான்.
ஏதோ ஒரு மதத்தின் வாக்குகளை பெறுவதற்காக இன்னொரு மதத்தை திவிரவாதியாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்று வெளுத்திருக்கிறார்.
கவனிச்சீங்களா கமல்?