மக்கள் உயிரை மதிக்காத இந்த அரசு தூக்கி எறியப்படவேண்டும் !! கோபத்தை கொட்டித் தீர்த்த கமல்ஹாசன் !!!
பொது மக்களின் உயிர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், புகழுக்காக ஏங்கி செயல்படும் இந்த அரசு விரைவில் வீழ்த்தப்படும் என்று நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபமாக தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் தாங்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு பள்ளி மாணவ- மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லக்கூடாது என்றும், உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர்கள வைக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தற்போதைய ஆளும் கட்சியான அதிமுக எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா என்ற பெயரில் நடத்தி வரும் பொதுக்கூட்டங்களுக்கு மாணவர்கள் அழைத்து வந்தும், உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட் வைத்தும் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கோவையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி உயிருள்ள அரசியல்வாதிகள் படத்துடன் வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட் அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரங்கசாமி கவுண்டன் புதூரைச் சேர்ந்த ரகுபதி என்பவர் சிங்கா நல்லூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அலங்கார வளைவு மோதி, ரகு கீழே விழுந்தார்.
அவர் எழுவதற்குள், எதிரே வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ரகு உயிரிழந்தார். இதையடுத்து அவசர அவசரமாக அலங்கார வளைவு நீக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது என்றும் இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner"ஜி"க்கள் உணரவேண்டும் என்று கமலஹாசன் மிகக் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.