நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி..? மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கமல்ஹாசன் புதிய தகவல்
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதித்து உள்ளோம், ஆனால் இப்போது விவரிக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்- கமல் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்கு சாவடி முகவர்களோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளோடு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 85 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் கூட்டணி யாரோடு.?
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் .கிளை அளவில் கட்சியை பலப்படுத்தவும் கடந்த முறை தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், 2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்தோம். கூட்டணி குறித்து விவாதித்து கொண்டு உள்ளோம். இப்போது கூட்டணி குறித்து விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்