கமல் பிரச்சாரத்துக்கு தடையில்லை... உயர்நீதிமன்றம் அதிரடி..!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் தான் நாதுராம் கோட்சே என்று கூறினார். கமலின் இந்த கருத்து தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரக்குறிச்சி மற்றும் சென்னையில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 நாள் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தோப்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தான் கூறிய கருத்து சரித்திர உண்மை என கமல் மீண்டும் கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கமல் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு தண்டபாணி அமர்வில் இந்த முறையீடு வைக்கப்பட்டது. பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் கமல் பேச்சு உள்ளதால் அவரது பிரச்சாரத்தை தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.
ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பிரச்சாரத்துக்கு தடை விதிக்கலாமா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும் எனவே இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க முடியாது என கூறி முறையீட்டை நிராகிரத்தனர்.